சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.038
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் பண் - இந்தளம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ag1F6pra03Q |
2.041
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண் புகார், வான்புகுவர்; மனம் பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DO3apSOzhk0 |
4.065
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோடு உலாம் மலர்கள் தூவித் பண் - திருநேரிசை (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=QMgykSuuVcE Audio: https://www.youtube.com/watch?v=0EPWtzYuzW0 |
6.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் பண் - திருத்தாண்டகம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=7q7wO_NpGbU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.038  
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
பண் - இந்தளம் (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி )
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி, சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி, தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே. | [1] |
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும், வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில் கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித் தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே. | [2] |
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை, தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே. | [3] |
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார் புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில் இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி, தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே. | [4] |
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று, கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந் தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே. | [5] |
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில், அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே. | [6] |
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர், ஓத_நஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில் மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத் தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே. | [7] |
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில் மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந் தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே. | [8] |
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில் சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே. | [9] |
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும் ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே, பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே. | [10] |
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை, ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும் ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய், வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.041  
மண் புகார், வான்புகுவர்; மனம்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி )
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும் கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும் விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித் தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே. | [1] |
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச் சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும், வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே. | [2] |
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார், சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப, நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே. | [3] |
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின் பொன் இயன்ற தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய், மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே! | [4] |
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள் கொடியிடையைப் பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல் பால்மதியம் தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ் ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே. | [5] |
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை முன் தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான், திருமுடிமேல் ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள் தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே. | [6] |
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி, சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும் அலர்க்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே. | [7] |
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரியுண்ண, பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு அரக்கனையும் தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே. | [8] |
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும், ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை; தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே. | [9] |
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப் போய் அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும் திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று அடைமின், புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே! | [10] |
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார் அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச் சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.065  
தோடு உலாம் மலர்கள் தூவித்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலின்நன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயவனேசுவரர் திருவடிகள் போற்றி )
தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன் வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் பாடு தான் செலலும், அஞ்சி, பாதமே சரணம் என்ன, சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே. | [1] |
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி அடைந்து, நும் சரணம் என்ன, அருள் பெரிது உடையர் ஆகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே. | [2] |
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய, முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித் தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே. | [3] |
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்) உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும் சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே. | [4] |
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த, தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று, சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே. | [5] |
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக் கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்- தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே. | [6] |
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட, ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும் தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே. | [7] |
குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை இறைச்சிப்பாரம், துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கி, தூய வாய்க் கலசம் ஆட்ட, உவப் பெருங் குருதி சோர, ஒரு க(ண்)ண்ணை இடந்து அங்கு அப்பத் தவப் பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே. | [8] |
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது, ஒக்கும், என் மலர்க்கண் என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப, சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே. | [9] |
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச் சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச, வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.082  
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருச்சாய்க்காடு (சாயாவனம்) ; (திருத்தலம் அருள்தரு குயிலின்நன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயவனேசுவரர் திருவடிகள் போற்றி )
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்; தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்; ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்; தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [1] |
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்; வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்; அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்; பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [2] |
கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்; வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்; வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்; ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்; உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [3] |
ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்; மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்; கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [4] |
கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்; பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்; ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்; சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [5] |
மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்; மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்றமூதூர் உடையார் போலும்; கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை கழலால், அன்று, குமைத்தார் போலும்; தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [6] |
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்; இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்; ஏகம்பம் மேவி இருந்தார் போலும்; படி ஒருவர் இல்லாப் படியார் போலும்; பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்; செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [7] |
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்; மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்; தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்; சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [8] |
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்; நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்; முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்; தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [9] |
உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச, நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்; பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்; சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. | [10] |